Monday, 20 August 2018

குறள் எண் 25

#திருக்குறளில் கூறப்பட்ட இந்திரன் யார்???....

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.
#திருக்குறள்--எண்:25
(அதிகாரம்:நீத்தார் பெருமை)

#விளக்கம் :-

#ஐம்புலன்களையும் அடக்கினவனது வல்லமைக்குப் பரந்த வானுலகத்திலுள்ளவர்களுக்குத் தலைவனாகிய இந்திரனே சான்றாக அமைவான்.

#இக்குறளில் சொல்லப்பட்ட இந்திரன் என்பவன் யார்?

#இதற்கு உரையெழுதியவர்கள் கூறும் விளக்கங்களைக் காண்போம்...

1.#சமண சமய இந்திரனா?...
மணக்குடவர் எழுதிய உரையில்...இக்குறளில் கூறப்பட்டுள்ள இந்திரன் சமண சமயத்தார் வணங்கும் தேவர்களின் தலைவனான இந்திரன் என்கிறார். தவவலிமையால் ஐம்புலன்களையும் அடக்கிய தவசீலர்களை இந்திரன் தன் தேவர்கள் புடை சூழ வரவேற்று வழிபடுவான். இந்த இந்திரனை தான் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் என்கிறார்..இது சமண நூலான மேருமந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார்..ஆனால் இவ்விளக்கம் இக்குறளோடு பொருந்திப் போகவில்லை.ஏனெனில் ஐம்புலன்களையும் அடக்கிய தவசீலர்களை இந்திரன் பணிவதாக இக் குறள் இல்லை.அத்தகைய தவசீலர்களின் சக்திக்கு இந்திரனின் வல்லமையே சான்றாகும் என்று தான் இக் குறளில் உள்ளது.எனவே இவன் சமண இந்திரனல்லன்.

2. #புத்த சமய இந்திரனா?
ஒருவன் புத்த சமய மெய்யியல் நெறிக்கேற்ப ஐம்பொறி-புலன்களை அடக்கி கடுமையாக தவமிருந்தால் இந்திரன் என்ற பதவியை அடைவான் என்கிறது புத்த சமயம்.ஆகவே இக்குறளில் கூறப்படும் இந்திரன் புத்த சமய இந்திரன் தான் என்கிறார்கள்.ஆனால் இக்குறள் ஐம்புலன்களையும் அடக்கியவன் இந்திர பதவியை அடையலாம் என்று கூறவில்லையே. அந்தத் தவசீலன் இந்திரனுக்குச் சமமாவான் என்று தானே கூறுகிறது.ஆகவே இந்த இந்திரன் புத்த சமய இந்திரனுமல்ல….

3. #இந்து சமய இந்திரனா?...
காளிங்கரின் உரைவிளக்கத்தில் கூறியபடி கோசிகன் கதையில் வரும் இந்திரனாக இருக்க முடியாது. ஏனெனில் இதில் நீத்தார் பெருமையும் இல்லை, இந்திரனைச் சான்றாகக் கொள்ளவும் அக்கதையில் ஏதும் இல்லை. எனவே இவரின் உரை ஏற்கத்தக்கதல்ல...

4.#பரிமேலழகர் சொல்லிய இந்து சமய இந்திரனா…
அகலிகை சாபம் பெற்ற கதையில் வரும் #கௌதமர்தான் இங்கு குறிப்பிடப்படும் ஐந்தவித்தான் என்பது பரிமேலழகர் உரை. மனைவியுடன் வாழும் கௌதமரை ஐம்புலன்களையும் அடக்கியவர் என எவ்வாறு கூற இயலும். எனவே கௌதமர் ஐந்தவித்தான் அல்ல. எனவே அவனை இந்திரனாக இக் குறள் கூறவில்லை….

5. #இந்து சமயம் கூறும் தேவர்களின் தலைவனான #தேவேந்திரனா?...
வைதீக (இந்து சமயம்) கூறும் தேவேந்திரன் ஒரு பெண் பித்தன்..ஆகவே ஐம்புலன்களையும் அடக்கிய தவசீலருக்கு அவனை எடுத்துக் காட்டாக கூற முடியாது.மேலும் கோமான் என்று இக்குறளில் இந்திரனை உயர்த்திக் கூறுகிறார் வள்ளுவர். மாற்றான் மனைவியைக் கூடிய காமுகனை கோமான் என்று அவர் அழைக்கமாட்டார்.இதே அடிப்படையில் நகுடன்-இந்திராணி கதையும் இக்குறளுக்குப் பொருந்திவராது; அதில் காணப்படும் இந்திரனையும் இப்பாடல் குறிக்காது. சாபம் விட்ட அகத்தியரும் அல்ல.ஏனெனில் கோபம் என்பதும் ஓர் உணர்சியாகும்.அதைக் கட்டுப்படுத்தாத அகத்தியரையும் திருவள்ளுவர் இதில் கூறியிருக்க முடியாது...

6.#பழந்தமிழ்நூல்கள் கூறும் #தமிழ்க்கடவுள் இந்திரனா?....
ஐந்திணைகளில் மருத நிலத்திற்கு இந்திரன் தெய்வம் எனக் கூறப்பட்டுள்ளது…

#திருவள்ளுவர் “மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்” என்ற குறளின் மூலம் ஒழுக்கம் என்பது சமண, புத்த நெறியோ அல்லது வைதீக (இந்து சமய) நெறியோ அல்ல என்று எந்த மதத்தையும் சாராத பொது மானிட ஒழுக்கம் பற்றிக் கூறுகிறார்...ஆகவே அவர் இக்குறளில் கூறிய இந்திரன் தமிழரின் மருத நிலத்தின் இந்திரனையே என்பது சரியானது என்கிறேன் நான்….

#திருக்குறள் ஆரியக்கலப்பற்ற தமிழ் மறையாகும்.

No comments:

Post a Comment

வங்காள ஏரி

சோழர்கள் தற்பொழுது "வங்காள விரிகுடா" என குறிப்பிடப்படும் தமிழர் கடலை, ஏரி என்று தான் குறிப்பிடுவார்கள்; திரைமீளர் வழிவந்தோருக்க...